அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்? - நிபுணரின் அலசல்! - WHAT COULD HAVE HAPPENED
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்? - நிபுணரின் அலசல்! - WHAT COULD HAVE HAPPENED.
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் 242 பேருடன், அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இது இந்தியாவின் அண்மைகால வரலாற்றில் மிகவும் மோசமான விமான விபத்தாக கருதப்படுகிறது.
லண்டன் காட்விக் விமான நிலையத்தை நோக்கி செல்ல வேண்டிய இந்த விமானத்தில் இந்தியர்கள் 169 பேர், பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்சுக்கலை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், இரண்டு பைலட்கள் உட்பட 12 விமான ஊழியர்கள் ஆகியோர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து இந்த விமானம் விபத்துக்குள்ளானது.
அதிக வெப்பம் காரணமா?: இந்த விமான விபத்து எதன் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்? என்பது குறித்து பொது விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சாரதா பிரசாத், ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், "விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மிக அதிக வெப்பம் நிலவினால், விமான என்ஜினின் உந்து விசை செயலிழந்து விடும். ஜெட் விமானத்தின் என்ஜின் ஆனது, சாதகமான உந்து விசைக்காக காற்றின் அடர்த்தியை சார்ந்திருக்கும். வெப்பம் காரணமாக காற்றின் அடர்த்தி குறைகிறது.
எனவே, விமானம் டேக் ஆஃப் ஆகும்போது என்ஜின் செயல்பாடு குறைந்து விடும். சர்வதேச விமானம் நீண்டதூர பயணத்தின் காரணமாக, முழு அளவிலான எரிபொருள் கொண்டிருக்கும். விமானத்தின் மேலே உந்தி தள்ளும் திறன் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேடே என்ற அவசரகால அழைப்பு கிடைக்கப்பட்ட 2 அல்லது 3 நொடிகளில் விமானம் கீழே விழுந்து விட்டது. செயல்படுவதற்காக நேரம் இருந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த விமானமும் தீப்பிடித்து விட்டது. வெப்பம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான பயணிகள் முழுவதும் எரிந்து உயிரிழந்திருக்கிறார்கள்.
எரிபொருள்: இந்த விமானம் முழு அளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. விமானம் அதிக சுமையைக் கொண்டிருந்ததா என்று மக்கள் பலருக்கு சந்தேகம் வரலாம். விபத்துக்குள்ளானது டீரீம் லைனர் விமானமாகும். இதில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வகையில் இருக்கைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் நேற்று விபத்து நடந்த விமானத்தில் 242 பேர்தான் பயணித்திருக்கின்றனர்.
லக்கேஜ் உட்பட பயணிகளின் சுமை என்பதை பொறுத்தவரை, அது ஒரு பிரச்னையாக இல்லை. விமான விபத்தின் முக்கியமான பிரச்னை என்பது வெப்பமான காற்றுதான். அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தின் ஒட்டு மொத்த ஓடுதளமும் மிகவும் அதிக வெப்பமாக இருந்தது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது உந்து விசை என்பது உருவாகாது. இதன் காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது என்று தெரிகிறது.
டிரீம் ஷீட்: மேலும், விமானத்தின் மொத்த எடை, காலநிலைக்கு ஏற்றவாறு இருக்கிறதா, ஓடுபாதையின் நிலை ஆகியவை குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும் டிரிம் ஷீட் என்ற ஆவணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். டிரிம் ஷீட் என்பது, விமானத்தின் லோடு கட்டமைப்பை காலநிலைக்கு ஏற்ப மாற்றும் பதிவுகளைக் கொண்ட ஆவணமாகும்.
மிகவும் அதிக அளவிலான வெப்பம் அல்லது வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும் போது, லோடு என்பது குறைவாக இருக்கும். விமானத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் முன்பு இதனை நாம் சரிபார்க்க வேண்டும். மிக அதிக வெப்பமான சூழலின் போது, டேப் ஆப் எடை என்பது குறைக்கப்பட வேண்டும். விபத்துக்குள்ளான விமானம் பாதுகாப்பான இயக்க வரம்புக்கு உட்பட்டு இருந்ததா என்று விமான விபத்து தொடர்பாக ஆய்வு செய்யும் போது இந்த ஆவணமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,"என்றார்
0 Comments