அந்த 5 விநாடிகள்... உயிர் தப்பிய சென்னை மருத்துவர் பரபரப்பு பேட்டி! - GUJARAT PLANE CRASH
விமான விபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் அதிர்ஷ்டவசாமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்த நிலையில், விஸ்வாஸ் குமார் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் மட்டும் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான விமானம் பிஜே மருத்து கல்லூரி விடுதியின் மீது விழுந்ததால், கட்டடத்தின் உள்ளே இருந்த மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். எத்தனை பேர் இதுவரை உயிரிழந்தார்கள்? என்பது குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், 50-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த அருண் பிரசாத் என்ற மருத்துவ மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விமானம் விழுந்த போது அவர் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், பெரும் சத்தம் கேட்டு அங்கிருந்து தப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "விபத்து நடைபெற்ற போது விடுதியின் 5 ஆவது தளத்தில் நான் எனது நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென பெரும் சத்தத்துடன் கட்டடத்தின் மீது ஏதோ விழுந்தது போன்று உணர்ந்தோம். சில விநாடிகளில் நாங்கள் இருந்த தளம் முழுவதும் புகை மூட்டமானது. என்ன நடக்கிறது? என்று புரியாமல் தவித்த நான், முதல் தளத்திற்கு ஓடி வந்தேன். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தேன். கீழே வந்த பிறகு தான் விமானம் விபத்துள்ளானது என்பதை அறிந்தேன். விபத்து நிகழ்ந்த 15-20 நிமிடங்களில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள்" என்றார்
0 Comments